எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

பெற்றோர்களே! உங்களின் பிள்ளைகளே முதன்மை...



                           இக்கட்டுரை வெளியாகும் பொழுது யு.பி.எஸ்.ஆர் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது முடிந்தும் இருக்கலாம்.    எது எப்படியாயி னும் உங்களின் பிள்ளைகள் தேர்வு எழுதியது நிஜம். இதுகாரும் இவர்கள் எப்படி தேர்வு எழுதுவார்களோ என்ற பயம். இனிஅடுத்து தேர்வின் முடிவு எப்படி இருக்குமோ என்ற கலக்கம். இந்த இரண்டு நிலைகளையும் எதிர்ப்பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? ‘செயல் புரிய மட்டுமே நமக்கு உரிமை உண்டு. அதன் பலன்களை எதிர்ப்பார்ப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. பலன்களைத் தன்னந்தனியாக நாம் விட்டுவிட வேண்டும்.’ என்று சுவாமி விவேகானந்தா தன் கர்ம யோக நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

                          உங்களின் பிள்ளைகளின் உயர் வாழ்விற்காக நீங்கள் செயல்பட்டீர்களா என்பது முக்கியமே தவிர வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றியது அல்ல. மகாபாரதத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். போர் முடிந்த நேரமது. பகவான் கிருஷ்ணர் பாண்டவர் குடும்பத்தையும்சோகத்தில் மூழ்கி இருக்கும் கௌரவர்களையும் காணச் செல்கிறார். முதலில் தன் அத்தையான குந்திதேவியைச் சந்திக்கிறார். குந்திதேவியோ கிருஷ்ணரைக் கண்டவுடன் கண்கலங்கி வணங்குகிறார். ‘ஏன் அழுகிறாய் அத்தை’ என்று கிருஷணர் வினவுகிறார். அதற்குகுந்திதேவி, ‘இல்லை இருஷ்ணா,போருக்கு முன் ஒவ்வொரு நாளும் உன்னை நினைந்து உருகாத நாளில்லை. போர் நல்லபடியாக முடிந்து விட்டது. இனி உன்னை நினைக்காமல் இருந்து விடுவோனோ என்ற பயம் வந்துவிட்டது.அதனால் தான் அழுகிறேன்’ என்றார்.

                            அதற்கு கிருஷ்ணர், ‘பயம் வேண்டாம் அத்தை. இனி நடப்பவை எல்லாமே நலம் பயக்கும். உங்கள் அன்பு என்றுமே குறையாது. கலங்காதீர்கள்’ என்றார். பிறகுகொஞ்ச நாள் கழித்து கிருஷ்ணர் கௌரவர்களின் அம்மாவான காந்தாரியைச் சந்திக்கச் செல்கிறார். எப்படி அத்தை இருக்கிறாய் என்றதுமே காந்தாரி கதறி அழுகிறாள். ‘கிருஷ்ணாஉன்னால் தான் என் மக்கள் எல்லாம் மாண்டு போனார்கள். நீர் செய்தது சரிதானாஇது நியாயமாசொல்லு கிருஷ்ணா!’ என்றாள் காந்தாரி. கிருஷ்ணர் சொன்ன அந்த பதில் தான் இன்றையக் கட்டுரையின் செய்தி. ‘அத்தைநீங்கள் சொல்வது தவறு. உங்கள் கணவர் பார்வை இழந்ததற்கா நீங்களும் உங்களுடையக் கண்களைக் கட்டிக் கொண்டு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியாமல் போனதுஉங்களுடையக் கண்களைக் கட்டிக் கொண்டதால் உங்களுடையப் பிள்ளைகளை நீங்கள் கவனிக்க முடிந்ததா?

                           அவர்கள் எங்கு போனார்கள்யாரிடம் பழகினார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களாதீயவர்களிடம் பழகிய போது அதை நீங்கள் தடுக்காமல் என்னைக் குறை கூறுகிறீர்களேஇது நியாயமா?’    அன்று பதில் கூறத் தடுமாறிய காந்தாரியை இன்றும் நம் சமூதாயத்தில் நிறையவே பார்க்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தான் சுவாமி விவேகானந்தர், ‘செயல்புரிய மட்டுமே நமக்கு உரிமை உண்டு’ என்கிறார்.

                             சமீபத்தில் ஏர் ஏசியா நிறுவனர் டான் ஸ்ரீ தோனி பெர்னான்டஸ் அவர்கள் கூறிய அழகான வார்த்தை இது. ‘Don’t live your life in them,but support them where they want to go.’ என் பிள்ளைகளே எனக்கு முதன்மை என்று எண்ணும் பெற்றோர்களே! உங்களின் வாழ்க்கையே அவர்கள் வாழ்க்கையில் திணித்து விடாதீர்கள்மாறாக அவர்களைக் கொஞ்சம் தனித்து விடுங்கள். உங்கள் வீட்டில் பட்டதாரிகள் பிறக்கவில்லைஉருவாக்கப்படுகிறார்கள். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே கேள்வி. ‘காரியத்தைச் செய்யுங்கள்,சக்தி தானாகவே வரும்’ என்கிறார் தத்துவ மேதை எமர்சன். உங்கள் பிள்ளைகள் உயர நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்உங்களுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் பார்த்து அசை போட்டுக் கொண்டிருக்கிறார் கள். உங்களின் பிம்பமே உங்களின் பிள்ளைகள்.

                            சுவாமி விவேகானந்தா கூறிய ஒர் அழகான கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். தாய் மான் ஒன்று தன் குட்டி மானை அழைத்துக் கொண்டு தண்ணீரில் தன் பிம்பத்தைக் காட்டி, ‘பார்த்தாயா நான் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறேன்.நான் மிகவும் தைரியசாளி’ என்று தன் குட்டியிடம் கூறியது. கூறி முடிக்கும் தருவாயில் எங்கிருந்தோ காட்டு நாய்களின் ஊலைகள் அதிகமாக கேட்டவுடன் தாய் மான் தன் குட்டியை அழைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது. தூரமாக ஓடி நின்ற தாய்மானைப் பார்த்து குட்டி மான், ‘என்ன அம்மா,கம்பீரம் தைரியம் என்றெல்லாம் பேசி விட்டு இப்படி பயந்து ஓடி வருகிறாயே?’ என்றது. அதற்கு அந்த தாய்மான், ‘அது என்னவோ தெரிய வில்லை,காட்டு நாய்களின் சத்தம் கேட்டவுடன் எனக்கு ஒரே பயம் வந்து விடுகிறது.என்றது. அந்த மானின் நிலையைப் போலத்தான் இன்றைய பெரும்பாலான பெற்றோர்களும்.

                              உங்களைப் பார்த்து வளர்ந்ததை விட உங்களைப் பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள் தான் உங்களின் பிள்ளைகள். உங்களின் செயல்கள் அவர்களின் விளைவுகள். முதல்வனாக இருக்க விடுவதும் முதல்வனோடு இருக்க விடுவதும் உங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே இருக்கின்றது. ‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்என்பது வள்ளுவர் வாக்காகும். அவையத்தில் பிந்தி இருப்பச் செயல் அல்ல. உலகில் வெற்றி பெற்றவர்கள் யாவரும் தத்தம் பெற்றோர்களால் முதன்மையாக்கப்பட்டவர்கள் என்பதை உணர்வீகளாஉலக அறிவியல் மேதை தோமஸ் ஆல்வா எடிசன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். 


             ஆனால்தன் ஆசிரியரால் புறந்தள்ளப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டவர். நீக்கப்பட்ட எடிசனை உலகம் போற்றும் அறிஞனாக உருமாற்றியவர் சாட்சாத் அவர் அம்மாவே தான். பள்ளியில் பின் தள்ளப்பட்டாலும் வீட்டில் முன் தள்ளப்பட்டப் பெருமை அவரின் அம்மாவையே சாரும். இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?      

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

லீ சோங் வே விட்டுச் சென்றது தோல்வி அல்ல, அது ஒரு வேள்வி!

                                 அன்புசால் மாணவ பிரம்மாக்களே! ரியோ ஒலிம்பிக் 2016 மலேசிய மக்களின் மனங்களிலே ஒரு கீறலை ஏற்படுத்தியிருக்கிறது. சுருக்கென்று தைக்கும் அந்த வலி மறைவதற்குள் நறுக்கென்று நாலு வார்த்தைகளை உரைக்கவிருக்கின்றேன். ரியோவை விட இனி ஒரு களம் அமையுமா என்பது யாருக்கும் தெரியாது. இம்முறை அதிர்ஸ்ட தேவதை மூன்று முறை மலேசியாவின் கதவைத் தட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது மலேசியாவிற்குத் தோல்வி அல்ல, வெற்றி மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கு. அவ்வளவு தான். விதி ஒரு கதவை மூடி விட்டாலும், நம்பிக்கை ஒரு நாள் நிச்சயம் கதவைத் திறக்கும். அந்த நம்பிக்கை நட்சத்திரம் வேறு யாருமல்ல, நீங்கள் தான்!

                   எங்கு பார்த்தாலும் லீ சோங் வேயின் அலைகள் தான். மலேசியாவிற்கு முதல் தங்கம் கிடைத்து விட்டதைப் போலவே ஒர் உணர்வு. ஆனால், நடந்தது வரலாற்றுப் பதிவாகிவிட்டது. லீ சோங் வேயின் தோல்வியை நன்றாக உள் வாங்கிக் கொள்ளுங்கள் மாணவர்களே! காரணம் அதற்கு வஞ்சம் தீர்க்கும் வீரராக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது? உங்கள் மனத்தினில் அந்த தனலை நன்றாக எரிய விடுங்கள். கொழுந்து விட்டு எரியும் அந்த தனல் ஒரு நாள் எழுச்சி வேள்வியாகட்டும். வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது பொய்யாகி விடுமா என்ன? ‘கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறுவது போல், எல்லையிற்றப் பரம்பொருளிடமிருந்து நீங்கள் தோன்றியிருக்கிறீர்கள் என்று முண்டக உபநிடதத் தில் கூறியிருப்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்!

                              பாரதியார் ஓடி விளையாடுஎன்று வளரும் பாப்பாவைப் பார்த்து தான் கூறினாறே தவிர வளர்ந்து விட்டப் பெரியோரை அல்ல! அச்சம் தவிர்க் வேண்டிய தருணம் இது. ஆண்மைக் கொள்ளுங்கள். தீமையில் விழாமல், உன்னுள் இருக்கும் பகையை வெல்லுங்கள். அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ஸ் மொத்தம் 28 வென்று இந்த ஒலிம்பிக்கோடு விடை பெறுகிறார். ஜமாக்காவின் உலக அதி மின்னல் ஓட்டக்காரர் உசேன் போல்டு மொத்தம் 9 தங்கங்களோடு தன்னுடைய ஒலிம்பிக் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டார். ஆனால், நம் நாட்டு பூப்பந்து  வீரர் லீ சோங் வே 3 வெள்ளிப் பதக்கத்தோடு உங்களுக்கெல்லாம் வழி விடுகிறார். அடுத்த லீ சோங் வேயாக ஏன் நீங்களாக இருக்கக் கூடாது. 

                      இது விழித்தெழும் தருணம். மாணவ பிரம்மாக்களே! மலேசியாவுக்கு முதல் தங்கத்தை மனதிலே உருவாக்க ஆரம்பித்து விடுங்கள். நீங்கள் ஆண்ட பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பது உண்மையாயின், விளையாட்டுத் துறையைக் கையிலெடுங்கள். மீண்டும் ஆண்டு காட்டுங்கள்! கடல் துளியில் எந்தத் துளி முதல் துளி என்று யாரால் சொல்ல முடியும்?

                   விளையாட்டுத் துறையில் இந்தியர்கள் வீறு கொண்ட காலத்தைப் பற்றி நான் கதைக்க வரவில்லை. டாக்டர் ஜெகதீசன்,இராஜாமணி,ஆறுமுகம், பறக்கும் பாவை சாந்தி போன்றோர் செய்தச் சாதனைகளை உங்கள் மனங்களிலே விதைக்கவே நான் விழைகிறேன். ஒரு சாதாரண மனிதரை அசாதாரண மனிதராக மாற்றக் கூடிய சக்தி சூழ்நிலக்கு உள்ளது. சாதிக்கின்றவர்கள் சூழ்நிலைக்காக காத்திருக்க மாட்டார்கள், மாறாக சூழ்நிலையைத் தானாகவே உருவாக்கிக் கொள்வார்கள். நீங்களும் அப்படித்தான். பள்ளி, மாவட்டம்,மாநிலம் மற்றும் தேசிய ரீதியிலான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வாய்ப்புகளை அள்ளுவதை விட்டுவிட்டு எட்டி நிற்கலாமா?

                       நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
              வஞ்சனைச் சொல்வாரடி கிளியே- வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே!

                   என்று பாரதியார் சாட்டையடிக் கொடுத்ததை மறந்து விடாதீர்கள்! மாணவர்களே, பழங்கதைகள் இனி நமக்கு வேண்டாம். புதியதோர் உலகம் செய்யப் புறப்படுங்கள். ஒலிம்பிக்கில் தமிழன்டாஎன்று மார்தட்டிச் சொல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். தமிழினத்தைத் தூக்கி விட துடித்து எழுங்கள்! ஆக்கச் சிந்தனையோடு உறுதி கொள்ளுங்கள். மனம் உண்டானால் நிச்சயம் மார்க்கம் உண்டு. ஒலிம்பிக்கில் சாதித்த அனைவரும் உங்களைப் போன்று ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் தான். ஆசிரியரால் அடையாளம் காணப்பட்ட அவர்கள் பிறகு தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

                   உலகமே அதிசயத்த மாவீரன் நெப்போலியன் ஓர் சாதாரண தளபதியிடம் தோற்றது பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்களா? அந்த தளபதி தன்னுடைய சிறு வயதில் பள்ளித் திடலிலே நெப்போலியனைப் போன்று பொம்மைச் செய்து தோற்கடிப்பது போல் விளையாடுவாராம். அந்த சிறு வயதில் பதிந்த அந்த பதிவு தான் பின்னாளில் நிஜமாகியது. பிரிட்டிக்ஷின் ஈடு இணையற்ற இராஜ தந்திரி வின்சன் சர்ச்சில் தாம் படிக்கும் காலத்தில் பேனா மையை ஒரு தாளில் தெளித்து சுயமாகப் பேசிக் கொண்டிருப்பாராம். என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு, ‘எதிரிகளின் மீது என் போர்க்கப்பல்கள் குண்டு வீசிக் கொண்டிருக்கின்றஎன்று பதிலளிப்பாராம். 

                                             ரியோ ஒலிம்பிக்கில் நடந்த இன்னொரு சாதனையை நான் இங்கு பதிவு செய்கின்றேன். அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ஸை யாரும் தோற்கடிக்க முடியாத பட்சத்தில்  கொடிகட்டிப் பறந்த அந்த வீரரை ஒரு சிறிய நாடான சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் என்ற இளைஞன் தோற்கடித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இன்னும் பசுமையாக இருக்கிறது.


                   அதனால் தான் வைரமுத்து சொல்லுவார், ‘சாதிப்பதற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லைஎன்று. ஒட்டுமொத்த மலேசியாவும் எழ வேண்டுமாயின் ஒலிம்பிக்கே உங்கள் குறியாகட்டும். நான்கு ஆண்டிற்கு ஒரு முறை வந்து போகும் ஒலிம்பிக்கை உங்கள் மனதிலே பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாக்கத்தால் நீங்கள் உயிர்த்தெழ வேண்டும். தேர்வுக்காகக் காத்திருக்கும் மாணவ பிரம்மாக்களே! ஒலிம்பிக் எனும் தங்க மேடையில் தங்க மகள் காத்திருக்கிறாள்...உங்களை ஆராதிப்பதற்கு!