ஒரு பிறப்பு என்பது இறைவனின் கருணையின் வடிவம். அந்த பிறப்பிற்கு ஈடு இணையாக சொல்வதற்கு இந்த உலகத்தில் எதைக் காட்டுவது? ‘பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனைப் புரிந்து கொண்டால்
அவனே……. இறைவன்’. அந்த பூஜ்ஜியத்தின் இரகசியத்தை யாரும் அறிந்தோறில்லை. அப்படி இருக்கையில், ஒரு பிறப்பு இழிவானது என்று கூறும் நம் இனத்தின் அறியாமையை என்னவென்று சொல்வது? பிறப்பில் ஒரே இனம், ஒரே இரத்தம் ஆனால் எப்படி பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டது? இக்கருத்தை ஏற்றுக் கொண்டு பல நூற்றாண்டுகளாக நம்பி வரும் தமிழர்களுக்கு ஒரு செய்தி.
எந்த நூற்றாண்டிற்கும் ஒவ்வாத இக்கருத்தினால் ஏற்பட்ட விபரீதமான விளைவு என்ன தெரியுமா? உலகத்தில் ஒன்று சேர முடியாத, ஒற்றுமை இல்லாத இனமாக பச்சைக் குத்தப்பட்டு விட்டோம். மேலும், இதன் தொடர்ச்சியான விளைவினைச் சொல்லி மாளாது. அன்பே சிவமென்று கூறுகிறோம். அன்பு வெறும் சிவனுக்கு மட்டும்தானா? மனிதனுக்கு குறிப்பாக தமிழனுக்கு இல்லையா? அன்பு இல்லாத சமுதாயமா நாம்? அப்படி இருந்திருந்தால் தன் இனத்தையே வெட்டிச் சாய்க்கும் கலாச்சாரம் எப்படி உருவாகியிருக்கும்? தன் சொந்த இனத்தையே கொல்லும் ஓர் இனமா
நாம்?
‘தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை’ என்பது திருமூலர்
உரைத்த உலகம் அறிந்த உண்மை. மனிதனும் தெய்வமாகலாம் என்பதை யாரும் மறுக்க இயலாது. கடவுள் என்ற சொல்லைப் பிரித்தால் கட + உள் என்று தான் பிரியும். அதாவது, கடவுளின் தன்மையை உணர வெளியே தேடாமல், நம் உள்ளே கடந்து சென்று தேடி உணர்ந்தால் நிச்சயம் உணர முடியும் என்பது உலகம் கண்ட உண்மை. கடவுள் மனிதன் உருவில் வந்ததும் இக்கருத்தை விளக்குவதற்கே. சுருங்கக்கூறின், மனிதனாகப் பிறந்த அனைவரும் இறைவனை அடையவும் முடியும், இறைசக்தி யாகவே மாறிவிடவும் முடியும். ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன் என்பதெல்லாம் வெறும் வாய்
வார்த்தைதானா?
மனிதன் என்று சொன்னால் உலகத்தில் பிறந்த எல்லாரையும் குறிக்குமே ஒழிய ஒரு தனிப்பட்ட மனிதனையோ இனத்தையோ குறிக்கவில்லை . எல்லா குருமார்களும், மகான்களும், சித்தர்களும், இறைத் தூதர்களும் மனிதனாகப் பிறந்து இறைசக்தியை அடைந்தது உண்மையென்றால், நான் சொல்வதும் உண்மைதான். நம்முடைய குலதெய்வங்களும் காவல் தெய்வங்களும் உருவான கதையைப் பார்ப்போமானால், அதன் மூலம் ஒரு தனி மனிதனில் இருந்து தான் உருவாகியிருக்கின்றது.
அப்படியிருக்கையில் தமிழர்களில் ஏன் இந்த
ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது? எப்படி வந்தது என்று
நான் ஆராய விரும்பவில்லை. ஆனால், தமிழ் இனத்தை அழித்துக்
கொண்டிருக்கும் இந்த கொடிய நோயை இன்னுமா விட்டு வைக்க வேண்டும்? ‘மனிதருக்குள்ளே ஆயிரம் ஜாதி என்பது வஞ்சக வார்த்தை’ என்று நொந்துப்போய் சொன்ன பாரதியார் வார்த்தையைக் கொஞ்சம்
உள்வாங்கிக் கொள்ளுங்கள். வஞ்சக வார்த்தைகளை இனியும் நீங்கள் நம்பாதீர்கள். நமது அடுத்தத்
தலைமுறையாவது ஒற்றுமையாக வாழட்டும். தமிழனின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது. இனியும் நமக்குள்ளே மறைமுகமாகப்
பழங்கதைகள் சொல்லிக் கொண்டு வாழ்ந்து என்னப் பயன்? ஒரு சமூகத்துக்குள்ளே இன்னொரு சமூகத்தை உருவாக்கிய இழி நிலையை வேறெங்கும் யான்
பார்த்ததில்லை.
எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைப் படைத்திருக்கிறான்.
ஆனால், அந்த உணவை அதன் கூடுகளில் கொண்டு போய்
போடுவதில்லை. அதைப்போல, தமிழினம் மீள வேண்டுமாயின், மீண்டும் எழ வேண்டுமாயின் அந்தக் குறுகிய மனோபாவத்தை மாற்றிக்
கொள்ள வேண்டும். சாதிகள் என்பதெல்லாம் ஒரு வகையான மனோபாவம். இனப் பற்றுக்கு வழிவிடுங்கள்.
இனப் படுகொலைக்கு விதையை விதைக்காதீர்கள். ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா!’ என்றப் பாடலெல்லாம் அடங்கியப் பிறகு தான் விளங்குமோ? திருவள்ளுவர் மிக அழகான ஒரு குறளை வடித்திருக்கிறார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ என்ற குறள் தான் அது.
மனிதப் பிறப்பிலே எந்த வேற்றுமையும் கிடையாது. அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு
அவர்கள் குணங்கள் அமைகின்றன என்பதுதான் அதன் பொருள். இதை விட வேறென்ன விளக்கம் வேண்டும்?
விரைவாக நம் இனத்திற்குள்ளே ஒரு சிந்தனைப்
புரட்சி உருவெடுக்க வேண்டும். இத்தனைக் கால வரட்சியை அது ஈடுகட்ட வேண்டும். உலகில்
உள்ளவை அனைத்தும் ஒரு நாள் மாறுதல் அடைந்தே தீரும். இது இயற்கையின் நியதி. தமிழினத்தின்
அவலமும் அப்படித்தான். ‘நெஞ்சில் உரமும் இன்றி,நேர்மைத் திறமும் இன்றி,வஞ்சனைச் சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி.’ என்று வீர முழக்கமிட்ட பாரதியை விடவா நான் சொல்லிவிடப் போகிறேன். அப்படியிருந்தும்
மனம் கேளவில்லை. ‘நட்டக்கல்லும் பேசுமோ நாதன் தான் உள்ளிருக்கையில்’ என்று சிவவாக்கியார் அருளியது உண்மையாயின் அந்த நாதன்
நம் எல்லாரிடமும் தானே இருக்கிறார். உள்ளிருக்கும் நாதனுக்கு மனித வேற்றுமைக் கிடையாது.
ஆக, மனமே நீ மாறிவிடு! மானமுள்ளத் தமிழனுக்கு
மாற்றமே நிரந்தரம். நம் இனத்தின் எழுச்சிக்கு நாமே சாட்சி, நம் இனத்தின் வீழ்ச்சிக்கு நாமே சூழ்ச்சி! ஆண்ட இனம் என்பதேல்லாம் பழையக் கதை, அதைத் தாண்ட நினைப்பதே நாளைய விதை!
கீதையில் அர்ச்சுணன்
தன் சொந்த உறவினர்களைப் பார்த்து(துரியோதனர்கள்) துக்கம் கொண்டு கலங்கி நின்ற வேலையில்
தான் கிருஷ்ணரால் கீதோபதேசம் பிறந்தது. அதே போல், கலங்கி நின்றத் தமிழர்களுக்கு யார் துணை வருவார்? நிச்சயம் யாரும் வரப்போவது இல்லை! காரணம், ‘யாரும் இல்லை அங்கே...நீயே சாட்சியாக.’ மீண்டு வர, மீண்டும் வர வழிவிடுங்கள். விதைக்கப்பட்ட
எண்ணங்களுக்கு உயிர்ப்புக் கொடுங்கள். ‘பழையன
கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற நன்னூலாரின் சிந்தனையை மனதிலே பொறித்துக் கொள்ளுங்கள். தமிழினம் மீட்சிப்
பெற வெகு தூரமில்லை!