எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 11 பிப்ரவரி, 2017

‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்!’


                   கல் தடுக்கி விழுந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் ஐயா கீழே விழுந்தாய் என்று கேட்டால், ‘கல் தடுக்கி விட்டது என்பார்கள். ஒரு கல் தானாகவே வந்து எப்படி தடுக்கும்? சிறுவர் முதல் பெரியவர் வரை இதே மனோநிலையைக் காணலாம். அதனால் தான் வள்ளுவப் பெருமகனார் தமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் தாமே முதல் பொறுப்பு என்று கற்களைப் போல் உறுதியாகக் கூறுகின்றார். ஆனால், அதை ஏற்கும் மனோபக்குவம் அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை. மாறாக, சிறு வயதிலேயே நாம் திருத்தினோமானால் நிச்சயம் ஒரு புதியத் தலைமுறையை உருவாக்க முடியும்.

                   ஒவ்வொரு மாணவருக்கும் தாம் வாழ்ந்த அந்த ஆறு ஆண்டுகளே அடித்தளமாய் இருக்கின்றது. பள்ளித் தொடர்பான எல்லாப் பிரச்சனைகளுக்கும் வள்ளுவர் எவ்வளவு அழகாக வழிகாட்டுகிறார் என்பனைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இப்படி நாம் சிந்திக்கத் தொடங்கி விட்டால் நிச்சயம் நம் எல்லாப் பள்ளிகளும் சிறந்தப் பள்ளிகளாக உருமாறிவிடும். அதற்கு நீங்கள் உடனடியாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது தம்முடைய கருமமே’. தமிழ் நாட்டின் முன்னால் முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அழகான ஆழமான கதை ஒன்று சொல்வார். ஓர் அம்மா தன் மகனுடன் மலை அடிவாரத்தில் வசித்து வந்தார். அந்தச் சிறுவன் ஒரு நாள் தன் அம்மாவுடன் கோபித்துக் கொண்டு, ‘உன்னைஎனக்குப் பிடிக்க வில்லை என்று கத்திக் கொண்டே வெளியே ஓடினான். வெளியே ஓடிய அந்தச் சிறுவன் நேரே அருகில் இருக்கும் சிறு மலை உச்சிக்குச் சென்று அழுது கொண்டே இருந்தான்.

                   அழுது கொண்டே, ‘உன்னை எனக்குப் பிடிக்க வில்லை என்று மலைகளைப் பார்த்து கத்தினான். திடீரென்று, ‘உன்னைப் பிடிக்க வில்லை என்று எதிரொலித்தது. அந்த ஒலியைக் கேட்டச் சிறுவன் சற்று பயந்து விட்டான். யாரோ தன்னைப் போல் அழுதுக் கொண்டு கத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். உடனே, நேராக தன் அம்மாவிடம் ஓடினான். நடந்தவற்றைக் கூறினான். அதனைப் புரிந்து கொண்ட அம்மா, ‘சரி, இப்பொழுது எனக்கு உன்னைப் பிடிக்கும் என்று உரக்கக் கத்திப் பார் என்று சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுவனும் உடனே ஓடி மலை உச்சியில் நின்று, ‘உன்னை எனக்குப் பிடிக்கும் உரக்கக் கத்தினான். இப்பொழுது மீண்டும் அதே குரல் எதிரொலித்தது. சிறுவனுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. என்னைப் போல் எல்லாரும் திருந்தி விட்டார்கள் என்று நிம்மதியோடு தன் அம்மாவிடம் சொல்ல ஓடினான். 
                           அதனைக் கேட்ட அம்மாவும் மகிழ்ச்சியடைந்தார். இக்கதை மீண்டும் மீண்டும் நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகிறது. எதிரொலியும் எதிராளியும் புறத்தில் காணப்பட்டாலும், அது அகத்திலிருந்தே முதலில் புறப்படுகிறது என்பதனை அறிக. அதனால் தான், பள்ளித் தொடர்பான எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் அதனை நிதானமாக ஆராய வேண்டும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

                   பழைய இந்தியக் கதை ஒன்று உண்டு. அன்னப் பறவை முன் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கலந்தப் பாலை வைத்தால் அது தண்ணீரைப் பிரித்து விட்டு, பாலை மட்டும் பருகுமாம். இங்கு அன்னப் பறவை என்பது பறவையை மட்டும் குறிக்கவில்லை, மாறாக அறிவைக் குறிக்கிறது. இதை அறிந்து கொண்டால் தீதும் நன்றும் பிறன்தர வாரா என்பதை உணர்வீர்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகள் நிறையக் கதைகளையும் சம்பவங்களையும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அவற்றையெல்லாம் உணர்ச்சிக்கு இடம் தராமல் அன்னப் பறவையைப் போல பிரிக்கப் பழகியிருந்தால் நீங்களும் சிறந்தப்  பெற்றோர்களாகலாம். பிள்ளைகள் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, அதனை ஆய்வுச் செய்வது அறிவுடையோர் செயல்.

                   டயஜீனஸ் என்கிற கிரேக்கத் தத்துவ ஞானி ஒருவர் இருந்தார். அவர் பகல் நேரத்தில் இடுப்பில் விளக்கைக் கட்டிக் கொண்டு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டே இருப்பாராம். வெளிச்சம் இருக்கின்ற போது விளக்கை எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்ட பொழுது, ‘நான் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறுவாராம். இது எப்படியென்றால், ஒரு பக்கம் தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த பெற்றோர்களைத் தேடிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், மறுபக்கம் ஒவ்வொரு பெற்றோரும் மிகச் சிறந்த ஆசிரியர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தத் தேடலுக்கு காலமே பதில் கூறட்டும். ரு வகை இழப்பு, மறுவகை இலாபம் என்று சீனத் தத்துவ  ஞானி   லௌ சு உரைத்திருப்பதைக் கொஞ்சம் அசைப்போட்டுப் பாருங்கள். தமிழ்ப்பள்ளியின் உயர்வுக்காக, வளர்ச்சிக்கா கொஞ்சம் இழந்தால் என்ன ஆகிவிடப் போகிறது?


                   இக்கட்டுரை வாசிக்கும் அன்பர்களே! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள முற்படுங்கள். நம் பிள்ளைகளுக்கும் இதனைக் கற்றுக் கொடுங்கள். மாற்றம் என்பது ஓர் அரிய வாய்ப்பு. உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்நோக்கினீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி அணுகினீர்கள் என்பதே முக்கியம். அந்த அணுகு முறையைத்தான் வள்ளுவப் பெருமான் தத்தம் கருமம் என்று ஏன் குறிப்பிடக் கூடாது. பரிசோதிக்கப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது என்று கிரேக்கத் தத்துவ ஞானி சோக்ராட்டீஸ் சொன்னதைக் கொஞ்சம் அசைப்போட்டுப் பாருங்கள். நாம் பேசும் கேட்கும் வார்த்தைகளைப் பரிசோதித்துப் பாருங்கள். நிறைய நிஜங்கள் புரிய வரும். தமிழ்ப்பள்ளிகள் தழைத்தோங்க இப்பரிச்சோதனை அவசியமாகிறது. 

                            ஆளத்துடிக்கும் அடுத்தத் தலைமுறைக்கு வழி விடும் கடமை நமக்கு உள்ளது. அது ஏன் பிள்ளைகளாக இருக்கக் கூடாது. ஆகவே, நமக்கு ஏற்படும் பெருமைக்கும் சிறுமைக்கும் யாரையும் குறைக் கூறாமல் கருமத்தை ஆராய்வோமாயின் தமிழ்ப்பள்ளிகள் யாவும் அற்புதங்களாக உருமாறும். தமிழின் தொன்மையும், தமிழனின் பெருமையும் மீட்டெடுக்கும் காலம் வெகு தூரமில்லை.