சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மாணவ பிரம்மாக்களே! நீங்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தைகளில் சுவாமி விவேகானந்தரையும் இணைத்துக் கொள்ளுங்கள். அவர் காட்டும் பாதைக்குத் திரும்பிவிடுங்கள். உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். ‘எழுமின் விழிமின்’ என்ற அவரின் முதல் வார்த்தையை உங்கள் மூச்சாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பள்ளி வாழ்க்கையில் அவர் ஓர் அடையாளமாக இருக்கட்டும். உங்கள் பன்னிரெண்டு ஆண்டு கால பள்ளி வாழ்க்கையில் ஒரு தடையத்தை ஏற்படுத்த வேண்டுமா? இனி வரும் விடயத்தைக் கடைப்பிடியுங்கள். உங்கள் தடைகளெல்லாம் தகர்ந்து போகும்.
“All power is within you; you can do anything and everything.
Believe in that; don’t believe that you are weak,
stand up and express the divinity with in you.”
சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரைத்த இவ்வரிகளை உங்களின் வாழ்க்கைப் பயணமாக்கிப் பாருங்கள். உங்களை யாரும் வெல்ல முடியாது. காரணம், ‘எல்லா சக்திகளும் உன்னுள் அடங்கியிருக்கின்றன,உன்னால் எதையும் அல்லது எல்லாவற்றையும் சாதிக்க முடியும். உன்னை ஒருபோதும் பலவீனன் என்று நினையாதே. எழுந்து உன்னுள் இருக்கின்ற ஆன்ம ஞானத்தை வெளிப்படுத்து’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த வார்த்தைகளை வேறு எங்கும் நீங்கள் கேட்க முடியாது. இந்த வரிகளை உங்கள் ஆழ்மனதில் பொன்னெழுத்துக்களால் பொரித்துக் கொள்ளுங்கள். ‘மனம் செம்மையானால் மந்திரம் செம்மையாமே’ என்பது அகத்திய முனிவரின் வைர வரிகள். மாணவர்களின் மனதினைச் செம்மைப்படுத்தி இரும்புக் கோட்டையாக உருவாக்குவதே விவேகானந்தரின் உயரிய இலட்சியமாகும்.
ஒரு முறை சுவாமி விவேகானந்தர் பாடச் சாலையைக் கடந்து செல்லும் பொழுது ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு சிறுவன் மட்டும் விளையாடாமல் தனியாக கீதையைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த சுவாமி விவேகானந்தர், அந்தச் சிறுவனிடம், ‘கீதைப்படிப்பதை வைத்து விட்டு முதலில் திடலில் சென்று விளையாடு. விளையாண்டப் பிறகு உடல் சுறுசுறுப்பாகும். பலம் பெறும். பிறகு நீ படித்துக் கொள்ளலாம்’ என்றார். இப்படிச் சொல்வதற்கு சுவாமி விவேகானந்தரைத் தவிர வேறு யாருக்குத் தைரியம் வரும்? உடலினை உறுதியாக வைத்திருப்பதற்கு சுவாமி விவேகானந்தர் மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார். புதிய ஆத்திச் சூடியில் பாரதியும் ‘உடலினை உறுதிச் செய்’ என்ற வேத வாக்கும் அவ்வாரே உரைக்கின்றது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலரின் வாக்கும் உடல் உறுதிக்கு பெரும் பங்கு கொடுத்திருப்பது சிந்திக்கத் தக்கது.
சுவாமி விவேகானந்தர் இந்த உலகத்திற்கு 3 மிக முக்கியச் செய்தியை வழங்கியிருக்கின்றார். முதலாவது, ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். இரண்டாவது, இறைவனும் நீயும் வேறல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் ஆன்மாவாக உரைந்து கிடக்கிறான். மூன்றாவதாக, மனிதனின் ஆன்மாவின் வெளிப்பாடே அவனிடம் உள்ள ஆற்றல் தான். இந்தச் சமூதாயத்தை மீட்சியுறச் செய்ய இதை விட வேறென்னச் செய்தி வேண்டும்? மாணவ பிரம்மாக்களே! அச்செய்திகளை உங்களின் வாழ்க்கையாக்கி உலகை வெல்லுங்கள். இறைவன் உன்னைப் படைத்திருக்கிறான் என்பதை விட, இறைவன் உன்னுள் உரைந்துகிடக்கிறான் என்பதே உண்மை. அதனால்தான் சுவாமி அவர்கள் உங்களை தெய்வீகமானவர்கள் என்று உரைக்கின்றார்.
மாணவர்களாகிய நீங்கள் யாரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். எடுத்தக் காரியத்தை விடுத்து, அடுத்தக் காரியத்திற்குச் செல்லாதீர்கள். அதனால் கருதியக் காரியம் கைவிட்டுப் போகும் என்பார் சுவாமி அவர்கள். சுவாமி அவர்கள் தன் வீட்டிலிருந்து பட்டிணத்திற்குச் செல்ல ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றைக் கடக்க பரிசில் ஏறிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் சுவாமி அவர்கள் பரிசிலில் ஏறி அக்கரைக்குச் செல்லும் பொழுது, அவ்வூர் சாமியார் ஒருவர் தண்ணிலே மிதந்து கொண்டு வந்து கரை ஏறுவார். இதை ஒவ்வொரு முறையும் சுவாமி அவர்கள் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அந்த சாமியார் சுவாமியைப் பார்த்து, ‘பார்த்தீர்களா, எந்தக் காசும் கொடுக்காமல் தண்ணீரில் மிதந்து வந்து செல்கிறேன்.இந்தச் சக்தியைப் பெறுவதற்கு நான் காட்டில் 20 ஆண்டுகள் தவமிருந்திருக்கிறேன். நீங்களும் சாமி தான். இப்படி காசு கொடுத்து வரலாமா?’
இதைக் கேட்ட சுவாமி அவர்கள் அந்தச் சாமியாரை ஓங்கி ஒரு அரை அரைந்தார். பிறகு சுவாமி அவர்கள், ‘5 சென் கொடுத்தால் அக்கரைக்குச் சென்று விடலாம். அதை விடுத்து, இதற்காக 20 ஆண்டுகளை வீணடித்து விட்டீர்களே.உன் குடும்பத்தைப் பார்க்காமல் கடமை தவறலாமா?’ அந்த அரை சாமியாருக்கு மட்டும் அல்ல, நமக்கும் தான். உணருங்கள் மாணவர்களே! ‘மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள்.விழித்திருங்கள். குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்!’ என்று கட உபநிடதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதையேத் தான் சுவாமி விவேகானந்தர், “எழுந்திடு,விழித்திடு குறிக்கோளை அடையும் வரை நில்லாதே!” என்று உலகத்திற்கு எடுத்து இயம்புகின்றார்.
‘நான் விரும்பும் நூறு இளைஞர்களைக் கொடுங்கள்; இந்த நாட்டினையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்று வீர முழக்கமிட்டவர் சுவாமி விவேகானந்தர். அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவரா? உறங்கியது போதும் விழித்தெழுங்கள் மாணவச் செல்வங்களே! அடங்கத் தெரிந்தவனுக்குத் தான் ஆளவும் தெரியும். கீழ்ப்படியும் எண்ணம் உடையவனே தலைவனாகவும் முடியும். உங்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் இலட்சியத்தை எண்ணித் துணிந்தப் பின் உங்களை உலகமே வாளெடுத்து எதிர்த்து நின்றபோதிலும், கொண்ட கருமத்தைக் கைவிடாதீர்கள். சாதிக்கத் துடிக்கும் மாணவர்களே! உங்கள் சாதனையின் வேகம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இதோ சுவாமி விவேகானந்தர் அவர்களே முழக்கமிடுகிறார்,‘நீருக்குள் அமுங்கியிருப்பவன் வெளியே வர எப்படித் துடிக்கிறானோ, அத்தகைய வேகம் நமக்கு வேண்டும்!’