எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 25 ஜூலை, 2016

தன்னை அறிந்தால் தரணி ஆளலாம்...



                   இந்தப் பிரபஞ்சமே நீங்கள் அல்லவா! நீங்கள் அல்லாத ஏதாவது இங்கே இருக்கிறதா என்ன? இந்தப் பிரபஞ்சத்தின் ஆன்மா நீங்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாமே நீங்கள் தாம். நீங்களே எங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பிரபஞ்சம் முழுவதுமே நீங்கள் தாம் என்று சுவாமி விவேகானந்தா தன்னுடைய ஞான யோகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். இதை விட வேறு வார்த்தை என்ன வேண்டும் உங்களுக்கு? அதனால் தான் சொல்லுகிறேன் மாணவ பிரம்மாக்களே! தன்னை அறிந்து கொண்டால் நீங்களும் தரணி ஆளலாம். நிச்சயமாக!

                   நாளையச் சரித்திரம் எழுத இன்றே புறப்படுங்கள். தேர்வுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். தேர்வு உங்களுக்காகக் காத்திருக்கட்டும். அப்படியொரு மனோதிடம் உங்களிடம் வேண்டும். விரை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா? ‘தூய நெஞ்சில் எழுகின்ற எண்ணங்களுக்குச் சக்தி மிக உண்டு. அத்தகைய நெஞ்சத்தில் எழுகின்ற எண்ணங்களே சத்திய சங்கல்பங்கள் ஆகின்றன என்று சுவாமி ஆத்மானந்தா உறுதியோடு கூறுகின்றார். தரணி ஆள இதை விட என்ன வேண்டும்? சூரியன் தாமரையை மலரச் செய்கின்றான். சந்திரன் அல்லியை மலரச் செய்கின்றான். உங்களின் மனதை மலரச் செய்ய மேலும் படித்துப் பாருங்கள். தரணி ஆள்வதற்கு பிறவி தகுதி தேவையில்லை; மாறாக நீங்கள் இன்று செய்கின்ற செயலே காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்ற குறளினை உங்களின் மனதினில் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் செய்கின்ற தொழில் அல்லது செயலை வைத்தே நாளைய வாழ்வுதனை நிர்ணயிக்கப்படுகிறது. சாதிக்கப் பிறந்த மாணவ பிரம்மாக்களே! உங்களிடம் உள்ள குறைகளைக் கடந்து முன்னேறுங்கள். உங்களது மனதை அடக்கி நல்லவற்றில் மட்டுமே முழுமூச்சுடன் ஈடுபடுங்கள் என்று உளவியல் மேதை ஜேம்ஸ் ஆலன் உரைத்திருப்பதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

                   சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். போர் வீரனுக்கான எந்தப் பின்புலனும் இல்லை. உடல் ரீதியாகவும் நிராகரிக்கப்பட்டவர். எல்லா வகையான ஏளனப் பேச்சுக்கும் கேலிக் கிண்டலுக்கும் ஆளாவர். ஆனால், பிறகு நடந்தது என்ன? பிரான்ஸ் சாம்பராஜ்யத்தின் முதல் பேரரசன் ஆனார். ஆம், அவர் தான் மாவீரன் நெப்போலியன். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் தரணி ஆளவில்லையா? அவரைப் போல் நீங்களும் நம்புங்கள். குறையைப் பார்க்காதீர்கள். நிறையைப் பாருங்கள். உங்கள் பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும். முதலில் உங்களுக்கு நீங்கள் எஜமானர்களாக இருங்கள். எழுந்து நில்லுங்கள், சுதந்திரர்களாக இருங்கள்.

                             இந்த உலகை ஆட்டி வைக்கும் சக்தி ஆற்றல்கள் உங்களது உள் மனதில் இருக்கிறதே ஒழிய உடம்பில் இல்லைஎன்று ஜேம்ஸ் ஆலன் உரைத்ததை உங்களின் ஆழ் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஏன் தெரியுமா? இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு நிக் விஜுச்என்ற ஓர் இளைஞனின் பயணம். பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லை, வளராத கால்கள். ஆம் இது தான் அவரின் அடையாளம். அவர் பிறந்தவுடன் அந்த தாய் மிரண்டு போனாள். ‘எடுத்து எறிந்து விடுங்கள்என்று கூறினாள். ஆனால், பிறகு அதே தாய் நிக்கை இந்த உலகில் போராடுவதற்குத் தயார் படுத்தினாள். தன் வாழ்க்கையில் இரு முறை நிக் வாழப்பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

                   அப்பொழுது தான் நிக் தன்னை அறியும் அறிவைப் பெறுகிறார். எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாதீர்கள். முன்னேற்றத்திற்கான எதிர்ப்புகள் இன்றியமையாதவை. வெற்றி என்ற காற்றாடி, எதிர்ப்பு என்ற காற்றை எதிர்த்துக் கொண்டு தான் மேலே பறக்கிறதுஎன்று சிந்தனையாளர் நார்மன் வின்சன்ட்பீல் கூறியதை நிச்சயம் நிக் படித்திருக்க வேண்டும். அவரைப் பார்க்கும் பொழுது நாம் அனைவரும் எல்லையில்லாத தெய்வீகப் பேரொளியில் இருந்து தோன்றியவர்கள் என்று நிச்சயமாக நமக்குத் தோன்றும். ஆசீர்வதிக்கப்பட்ட மாணவ பிரம்மாக்களே! விதி ஒரு கதவை மூடும் பொழுது நம்பிக்கை இன்னொரு கதவைத் திறக்கும்என்பார்கள். நம்பிக்கை தான் எல்லாமே!

                   இரண்டாம் உலகப் போரின் நாயகன் சர் வின்ஸ்டன் சர்ச்சில் தன்னுடைய சிறு வயதில் படிக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவம். சிறுவனான சர்ச்சிலுக்கு அன்று வகுப்பில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. சர்ச்சிலின் தேர்வுத் தாளை வாங்கிப் பார்த்த ஆசிரியருக்கு ஒரே ஆச்சர்யம். விடைத்தாளில் சர்ச்சில் விடையை எழுதாமல் பேனா மையைத் தெளித்து விட்டு அதனை ஆய்வுச் செய்து கொண்டிருந்தார். ஆசிரியர் அதனை வாங்கி, ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சர்ச்சில் வெள்ளைத் தாளில் தெளித்த மைகளைக் காட்டி, ‘எதிரியின் கப்பல்கள் நம் நாட்டின் மேலே பறந்து கொண்டிருக்கின்றன. அதனை எப்படி வீழ்த்துவது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறேன்என்றாராம். அப்படியொரு நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால் நீங்களும் ஜெயிக்கலாம்.

                   பாறையைப்போல் உறுதியாக நில்லுங்கள். உங்களுக்கு அழிவே இல்லை. நீங்களே இப்பிரபஞ்சத்தின் கடவுள்.என்று சுவாமி விவேகானந்தா நம்மை அழைக்கிறார். மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. மலையிலிருந்து விழும் அருவி கடலில் போய் சேர்வதை எவ்விதம் யாராலும் தடுக்க முடியாதோ, அதே போல் தரணி ஆள நினைக்கும் உங்களின் நம்பிக்கையை யாராலும் தடுக்க முடியாது. கனவு மெய்ப்பட வேண்டும்என்று முன்னோக்கிச் செல்லுங்கள். தீர்மானிப்பது நீங்களாக இருக்கட்டும். முடிவை இறைவனிடம் விட்டு விடுங்கள்.

                             ‘MAN PROPOSES AND GOD DISPOSES’ என்று ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். ஆதலால், உடனே தொடங்குங்கள். உன்னதத்தை நீங்களும் அடையலாம். மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள்;விழித்திருங்கள். குறிக்கோள், இலட்சியத்தை அடைந்தே தீருங்கள்!என்று கட உபநிடதத்தில் உங்களுக்காகவே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. உணர்ந்து கொண்டு உடனே புறப்படுங்கள். தன்னை அறியும் இரகசியமும் இதுவே!


திங்கள், 18 ஜூலை, 2016

தேர்வை நோக்கி எண்ணித் துணிக...



                             சாதிக்கப் பிறந்த மாணவர்களே! பிறக்கும் போதே நீங்கள் சாதித்து விட்டு தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எழுதப் போகும் தேர்வுகள் எல்லாம் உங்களிடம் தோற்றுப் போகும். ஒரு குழந்தைப் பிறக்கும் போதே 9 வகையான அறிவுத்திறனுடன் பிறக்கிறது என்று பேராசிரியர் ஹாவர்ட் கார்டனர் உலகிற்கு முரசொலித்ததை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். யு.பி.எஸ்.ஆர், பிதி 3 அல்லது எஸ்.பி.எம் தேர்வாகட்டும், தேர்வுகள் எல்லாம் தேர்வுகள் அல்ல, நீங்கள் தளராமல் இருந்தால்.

                   உங்கள் ஒவ்வொருவரிடமும் மனதிலே தீப்பொறி பறக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை ‘burning desire’ என்று சொல்லார்கள். நாம் அனைவரும் நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்து விட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நம் கடமை

                   என்று ஐயா அப்முல் கலாம் அவர்கள் எழுப்பியதை உள் வாங்கிக் கொள்ளுங்கள் மாணவ பிரம்மாக்களே! இயற்கையிலேயே நீங்கள் ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறீர்கள் என்பதை நம்புகிறீர்களா? நீங்கள் அளவிட முடியாத ஆற்றல் படைத்தவர்கள். நம்புங்கள். உங்களின் ஆற்றாமையை ஆழத்தில் புதைத்து விடுங்கள்.காரணம் நீங்கள் வாழப்பிறந்தவர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயல்...செயல்...செயல். சொற்கள் நீர்க்குமிழிகள்; செயல்கள் தங்கத்திவலைகள் என்பது சீனப் பழமொழிகளில் ஒன்று. பேச்சைக் குறைத்து விட்டு முயற்சியை அதிகப் படுத்துங்கள். இருக்கின்ற நாட்களை எண்ணுவதை விட, கொடுக்கப்பட்ட நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

                   உங்களுக்குத் தெரியுமா? வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்கள் எதையும் செய்வதில்லை. மாறாக, சாதாரண செயல்களையே சற்று வித்தியாசமாகச் செய்கிறார்கள். அவ்வளவுதான். நீங்களும் அப்படித்தான். நீங்கள் படிக்கும் நேரத்தை அதிகரித்துப் பாருங்கள். நீங்கள் படிக்கும் இடத்தை மாற்றிப் பாருங்கள். வித்தியாசம் வேறு மாதிரியாகத் தான் இருக்கும். காரணம் தேடுபவனுக்குத் தான் கிடைக்கும். தட்டுபவனுக்குத் தான் கதவு திறக்கப்படுகிறது. நீங்கள் சரியாக இருக்கிறீர்களா என்பதே கேள்வி. மனதுக்கு அழகு மங்கா உறுதிஎன்பது பாரதியாரின் வேத வாக்கு. பகவத்கீதையில், ‘இடைவிடாது செயல் புரிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இருக்கின்ற நாட்களில் கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மன உறுதியுடன் செயல் புரியுங்கள் மாணவ பிரம்மாக்களே!

                   சுவாமி விவேகானந்தா கர்ம யோகத்தில், ‘இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாச் சக்திகளையும் கவர்ந்து இழுக்கின்ற மையமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்கிறார். அதனால் தான் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று தொடர்ந்தாற் போல் கூறிக் கொண்டிருக்கிறேன். உபநிடதத்தில் யத் பாவம் தத்பவதி என்ற அழகான வரி இருக்கின்றது. அதன் பொருள், ‘மனிதன் எதை நினைக்கிறானோ, அப்படியே ஆகிறான் என்பதாகும். ஒரு பொதும் உங்களையும், நீங்கள் எடுக்கப்போகும் புள்ளிகளையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்! உழைப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள் அது உங்களை உயர்த்தும்.

                   இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்களுடைய மனதிற்குள்ளேயே இருக்கிறது என்பதைப் பகிரங்கமாகக் கூற விரும்புகிறேன். ஆம், மாணவ பிரம்மாக்களே! இவை எல்லாம் வேத வாக்கியங்கள். உள் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலையைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காதீர்கள். கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகவே, மிக உயர்ந்த வழிபாடாக அந்த வேலையைச் செய்யுங்கள். அந்த வேலையைச் செய்து முடிக்கும் வரை உங்கள் வாழ்க்கையையே அதில் செலவிடுங்கள்என்று மீண்டும் சுவாமி விவேகானந்தா உரைத்திருப்பதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத் தான் இராமலிங்க சுவாமிகள், ‘பசித்திரு, தனித்திரு, விழித்திருஎன்கிறார். இருக்கின்ற நாட்களில் நீங்களும் பசித்திருங்கள். வருகின்ற நாட்களில் தனித்திருங்கள்.  கிடைக்கின்ற நேரங்களில் விழித்திருங்கள்.

                   கழுகைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதன் மறு உருவத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வயதான கழுகு யாரும் நெருங்க முடியாத மலை உச்சியை அடைந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாம். பிறகு, உட்கார்ந்த இடத்திலேயே தன்னுடைய அலகை கல்லில் மோதி இரத்தம் வர உடைக்கப் பார்க்குமாம். வயதான கழுகின் அலகு மொத்தமாகி வளைந்து விடுவதால் அதனால் உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த அலகை உடைக்க முயற்சிக்கிறது. உண்ணாமல் உறங்காமல் இரத்தம் கசிய உடைந்த அலகில் மீண்டும் புதியதொரு இலகு முளைக்கும் வரை காத்திருக்கும் அந்த கழுகு. பிறகு, சிறிய முளைத்த அந்த அலகைக் கொண்டு தன்னுடைய முதிர்ந்த இரகுகளைக் கொத்திக் கொத்தி எடுக்குமாம்.

                   மீண்டும் புதிய அலகுகள் முளைக்கும் வரை காத்திருக்குமாம் அந்த கழுகு. புதிதாக முளைத்த அலகோடும் இரக்கைகளோடும் வானத்தைப் பிளக்க பறக்கத் தயாராகிறது கழுகு என்ற அந்த இராஜாளி. ஆம், இப்பொழுது அதற்குப் பெயர் கழுகு அல்ல, இராஜாளி. இயற்கையையே மாற்றி அமைத்த தைரியம் எப்படி அந்த இராஜாளிக்கு வந்தது? ஒரு சாதாரண கழுக் இராஜாளியாக மாறியது உண்மையாயின், சாதிக்கப் பிறந்த மாணவர்களே! நீங்கள் சாதிக்கப் பிறந்ததும் உண்மைதான். என் கடன் பணிசெய்து கிடப்பதேஎன்று அப்பர் சுவாமிகள் மொழிந்ததை நீங்களும் மொழிந்துப் பாருங்கள். என் கடன் படித்துக் கொண்டு இருப்பதேஎன்று. நீங்களும் ஆளப் பிறந்தவர்கள் ஆகலாம்.


                   அன்பு மாணவ பிரம்மாக்களே! சீனத் தத்துவ ஞானி அவர்கள், ‘yesterday is history, tomorrow is mystery, today is a gift’ என்று மிக அழகாக கூறியிருக்கிறார். நாளைக்கு எழுதப் போகும் தேர்வை விட இன்று என்னப் படித்தீர்கள் என்பதே முக்கியம். காரணம் இந்த நிமிடம் உங்களுடையது. தேர்வுக்கு நாட்கள் நெருங்குகிறது என்பதை விட நீங்கள் எல்லாப் பாடத்தையும் நெருங்கினீர்களா என்பதே முக்கியம். வெற்றிக்கு உங்களை யாரென்று தெரியாது. ஆனால், உங்களின் உழைப்பிற்கு வெற்றி என்றுமே அடிபணியும். எழுச்சியும் முன்னேற்றமும் ஒவ்வொரு உயிர்க்கும் பிறப்பிலே கிடைத்த உரிமைஎன்று இரிக் வேதத்தில் உதிர்த்ததை உங்களின் வேத மாக்கிக் கொள்ளுங்கள்.
                   

வெள்ளி, 15 ஜூலை, 2016

அறிவின் ஆற்றலை விட கற்பனை ஆற்றல் முக்கியமானது...



                   இவ்வாறு சொன்னது 21-ஆம் நூற்றாண்டின் முதன்மை மனிதராக டைம்ஸ் சஞ்சிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்டைன் ஆவார். மனிதனின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் அறிவின் ஆற்றலை விட கற்பனைச் சக்தியின் ஆற்றலே மேலோங்கி நிற்கிறது என்பது அன்னாரின் கூற்றாகும். இவ்வாறு சொன்னது ஒரு சாதாரன மனிதர் கிடையாது. சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. அறிவு என்பது நாம் தேடிச் சென்று பெறுவது. ஆனால், கற்பனை என்பது இறைவன் நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். அதனைப் பயன்படுத்திய மக்களே உலகை ஆண்டிருக்கிறார்கள்.

                   உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் அறிவே முக்கியம் அவர் ஏன் கூறவில்லை? அவர் உருவாக்கிய சார்பியல் கோட்பாட்டிற்கும் (theory relativity) கற்பனைக்கும் என்ன தொடர்பு? நிச்சயம் தொடர்பு இருந்ததால் தான் கற்பனா சக்தி முக்கியம் என்று உரைக்கின்றார். புத்தாக்கச் சிந்தனைக்கும் புனையாக்கச் சிந்தனைக்கும் அடிப்படையாய் இருப்பது இந்த கற்பனா சக்தியே! புதிய கண்டுபிடிப்புகளுக்கு உறைவிடமாய் இருப்பதும் கற்பனா சக்தியே! அறிவியல் அறிஞர்களிலிருந்து ஆசிரியர்கள் வரை அனைவரையும் புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும் ஆத்மார்த்த நெறியாக இருப்பதும் இந்த கற்பனா சக்தியே!

                   ஆழ்ந்து சிந்தோமானால் கற்பனா சக்தி மிக்கவர்கள் தான் இலட்சியக் கனவுமிக்கவர்களாக இருப்பார்கள். அதனால் தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகளைப் பார்த்து கனவு காணுங்கள் என்று உரக்க உரைக்கிறார். கனவிற்கும் கற்பனைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. கற்பனைகள் தான் கனவுகளாக உருமாறுகின்றன. அமெரிக்கர்களின் விண்வெளி வெற்றிக்கு அவர்களின் கற்பனா சக்தியே முக்கியக் காரணம் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? சமீபத்தில் நாசாவின் ஜுனோ என்கிற விண்கலம் வியாழன் கிரகத்தின் கோல் வளியில் சென்றடைந்த தை இந்த உலகமே வியந்து பார்த்தது. இந்த விண்வெளியின் ஆராய்ச்சியில் அவர்கள் முன்னோடியாக இருப்பதற்கு என்ன காரணம்? காரணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், அதற்கு நிச்சயமாக கற்பனா சக்தியும் ஒரு காரணம் என்பதை நாம் மறக்கலாகாது. இக்கூற்றை நிரூபிக்க அமெரிக்காவின்  ஹோலிவூட் திரைப்படங்களான ஸ்தார் வோர்ஸ் முதல் கேலெக்சி படங்களே சாட்சி.

                   அமெரிக்கர்கள்  முதலில் கற்பனைகளில் பார்த்து இரசித்தப் பின்னரே அறிவைப் பயன்படுத்தி அதனை உருவாக்குகின்றனர். கற்பனையைப் பயன்படுத்தி கோடிஸ்வரனாகலாம் என்பதை ஹோலிவூட்டைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் வந்த கேளிச்சித்திரப்படமான பைன்டிங் டோரியே இதற்குச் சாட்சி.
                  
                   இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோமானால், ஒரு நாட்டின் சரித்திரத்தையே மாற்றக் கூடிய அபரிமிதமான சக்தி அந்த கற்பனை வளத்திற்கு இருக்கிறது. பிரஞ்சு மாவீரன் நெப்போலியனைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அந்த மாவீரனைத் தோற்கடித்த டூயுக் வெல்லிங்தனிடம் சென்று தங்களின் வெற்றிக்கு என்ன இரகசியம் என்று வினவினார்கள். அதற்கு அவர், ‘நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது அடிக்கடி பொம்மைகளை வைத்துக் கொண்டு நெப்போலியனைப் போரில் தோற்கடிப்பது போல் விளையாண்டு மகிழ்வேன் என்றார். சுருங்கக்கூறின், தன்னுடைய சிறு வயதிலேயே வெல்லிங்டன் நெப்போலியனைத் தோற்கடிப்பது போல் கற்பனை வளத்தினை சுழலவிட்டிருக்கின்றார். கற்பனைக் கனவாக மாறி, பின் அதுவே வாழ்க்கையின் இலட்சியமாக்கியிருக்கிறது. ஜுன் 15 தேதி 1815-ஆம் ஆண்டில் வோட்டர்லு (இன்று பெல்ஜியம் என்கிற நாடு) இடத்தில் இச்சரித்திர நிகழ்வு உண்மையாகியிருக்கிறது.

                     கற்பனா சக்தி கற்ற அறிவை விட முக்கியமானது! ஏனெனில் கற்றது வரையறைக்கு உட்பட்டது! ஆனால், கற்பனை ஆற்றல் பூகோளத்தையே சுற்றும் தன்மையுடையது என்று ஐன்ஸ்டைன் கூறியது எவ்வளவு உண்மையாகிவிட்டது. கற்பனையின் ஆற்றல் முழுக்க முழுக்க நமது வலது பக்க மூளையின் தாக்கமாகும். இங்கு தான் கலையுணர்வு, மனிதனின் ஆற்றல்கள், இறைத்தேடல் யாவும் பொக்கிக்ஷங்களாக மறைப்பொருளாக இருக்கின்றன. அதனால் தான் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு துறையில் நிச்சயமாக ஒளிர்வார்கள் என்று அறிவியலாளர்கள் உரைக்கிறார்கள்.

                   மேலும், பெரிய புராணத்தில் கற்பனைக் கடந்த சோதி என்று ஆரம்பமாவதைச் சற்று கவனியுங்கள். இறைவனின் சோதியானது ஆதியானது, அந்தமானது. நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. அப்படியானால் நம்முடைய கற்பனையானது எவ்வளவு அபாரமானதாக இருந்திருக்கும்? தியானத்தின் அடிப்படையே கற்பனை தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நான்கு வேதங்களின் சாரமே நீ எதை நினைக்கீறாயோ அதுவாக ஆகிறாய் என்பது தான். தத்துவ மசி அல்லது அஹம்பிரம்மாஸ்மி என்பார்கள். இவை எல்லாமே கற்பனையிலிருந்து தான் ஆரம்பமாகிறது. எண்ணங்களின் கூட்டுதான் கற்பனை. எண்ணங்கள் விதைகள் என்றால் கற்பனைகள் மரங்கள் போன்றவை. எண்ணங்களின் வலிமையால் கற்பனைகள் வேர்விட ஆரம்பிக்கின்றன.

                   எண்ணிலடங்கா கற்பனைகள் விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. அதனை உள்வாங்கும் தகுதி நம்மில் இருக்கிறதா என்பது தான் கேள்வி! கற்பனா சக்தியில் எல்லாம் அடங்கியுள்ளது. அது நிஜ வாழ்க்கையின் பிடிமானத்திற்கு ஓர் ஒத்திகைப் போன்றது.என்று ஐன்ஸ்டைன் அழகாக எடுத்துரைப்பார். நிச்சயமாக நாம் எதிர்காலத்தில் வாழப்போகும் வாழ்க்கைக்கு ஓர் ஒத்திகைப் போன்றதே! பிரபஞ்ச அறிவும் ஆழ்மன ஆற்றலும் நம்மை இணைப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. எண்ணங்களே அதற்கு இணைப்புப் பாலம். இது வெறும் தூங்கும் போது வரும் கனவுப் பாலம் மட்டுமல்ல, கனவை நிஜமாக்கும் இலட்சியப் பலம்.


                   பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றதுஎன்பார் கிரேக்க தத்துவ ஞானி  சோக்ராட்டீஸ். எதையுமே பரிசோதித்துப் பார்த்தப் பிறகு தான் கருத்துகள் கூற வேண்டும். அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிதுஎன்று நம்முடைய ஔவைப்பிராட்டி மொழிந்ததைப் கொஞ்சம் பரிசோதித்துப் பாருங்கள். காரணம் மானிடனுக்கு மட்டுமே கற்பனா சக்தி படைக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள். பாரினை ஆழ வெகு தூரமில்லை!

திங்கள், 11 ஜூலை, 2016

குறைகளைக் காண முயலாதீர்கள், முடிந்தால் திருத்தங்களைக் கண்டுபிடி...



                   இப்படிச் சொன்னது முன்னாள் உலகப் புகழ் பெற்றத் தொழில் அதிபர் ஹென்றி போர்டு அவர்கள். அப்படித் திருத்தியதால் தான் இன்றளவும்  போர்டு காடிகள் பீடுநடைகள் போட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வரிகள் இயந்திரத்திற்கும் மட்டுமல்ல. நம் இதயத்திற்கும் சொல்லப்பட்ட வைர வரிகள். குறைகளைக் காண்பவர்கள் கறை தொட முடியாது என்பார்கள். கடைசி வரை பிரச்சனை என்ற கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். மனதில் உள்ளவை தான் வார்த்தைகளாக வெளி வரும். வார்த்தைகளாக வந்தபின் அஃது வேதங்களாக மாறுவதை நாம் அறிந்திர மாட்டோம்.

                   வார்த்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாது. வாயிலிருந்து வந்த சொல்லும் வில்லில் இருந்து வந்த  அம்பும் தன் வேலையைக் காட்டாமல் திரும்பவும் போகாது என்பார்கள். வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி உள்ளது. காரணம் வார்த்தைகள் எண்ணங்களின் பிறப்பிடம். எண்ணங்கள் மனத்தில் விதைக்கும் விதைகள். மனமோ மனிதனுக்குக் கிடைக்கப் பெற்ற பொக்கிக்ஷம். ‘மனம் செம்மையானால் மந்திரம் செம்மையாமோ’ என்று ஆகத்தியர் மொழிந்திருப்பது சிந்திக்கத்தக்கது. வார்த்தைகள் தான் மந்திரம்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

என்று திருவள்ளுவர் உரைத்திருப்பது மிகப் பெரிய சத்தியவாக்காகும். நாவினால் உரைத்த வார்த்தைகளுக்கு ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் இருக்கிறது என்பது இதன் வழி புலனாகிறது.

                   ஒரு முறை மகான் புத்தர் அவர்கள் தன் சீடர் ஒருவரை அழைத்து  ஒரு குடம் நிறைய தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அந்தச் சீடரும் ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். பிறகு, புத்தர் அந்த தண்ணீரில் சீடனை தன் கால்களைக் கழுவச் சொன்னார். கழுவியப் பிறகு அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். உடனே அந்தச் சீடர், ‘தண்ணீர் அழுக்காகிவிட்டது’ என்று சொன்னார். அதற்கு புத்தர், ‘தண்ணீர் முதலில் சுத்தமாகத்தானே இருந்தது. அந்த அழுக்கு உன்னிடம் இருந்துதானே சென்றது. நீ தண்ணீரை அழுக்காக்கி விட்டு தண்ணீரைக் குறை சொல்லலாமா?’ என்றார் புத்தர்.

                   அதனால் தான் சொல்கிறார்கள், ‘குறைகளைக் காணாதீர்கள்; நிறைகளைக் காணுங்கள் என்று. ஹென்றி போர்டு சொன்னதும் அது தான். குறையைப் பேசினால் கறையைக் காண முடியாது. ஒரு காலணி  தொழிற்சாலையில் நடந்த சம்பவத்தைக் காண்போம்.  காலணி முகவர் ஒருவரை ஒரு முறை அந்த தொழிற்சாலையின் நிர்வாகம் மிகவும் பின் தங்கிய கிராமத்திற்கு அனுப்பி அங்கு தன் காலணிகளை வியாபாரம் செய்ய யூகித்திருந்தது. அந்த முகவரும் கிராமத்திற்குச் சென்று சூழ்நிலைகளைப் பார்த்து விபரங்களைச் சேகரித்துக் கொண்டு வந்தார். தான் சேகரித்து வந்த விபரத்தை நிர்வாகத்திடம் விளக்கமாகக் கூறினார். இந்த கிராமத்தில் மக்கள் சுத்தமாக இல்லை. யாருக்கும் காலணி அணிய வேண்டும் என்று அக்கறை இல்லை.காலணி விற்க இங்கு சிரமம் என்றார்.

                      அதனைச் சற்றும் எதிர்பாராத நிர்வாகம் உடனே இன்னொரு முகவரை அங்கு மீண்டும் அனுப்பியது. அந்த நிருபரும் உடனே கிராமத்திற்குச் சென்று நிலவரத்தை நேரில் கண்டு ஆய்வுகள் செய்து தொழிற்சாலைக்குத் திரும்பினார்.  நிர்வாகக் கூட்டத்தில் மிகவும் கம்பீரமாக பேசலானார். அந்த கிராமத்தில் இன்னும் காலணி அணியும் முறை அறிமுகப்படுத்த வில்லை.இதுவே நம்முடைய வாய்ப்பு. மிகச் சுலபத்தில் காலணியை விற்று தீர்த்துவிடலாம்என்று கூறினார். முதலாம் முகவர் முடியாது என்று கூறினார். இரண்டாவது முகவரோ முடியும் என்று கூறினார். இதைத் தான் ஹென்றி போர்டு குறைகளைக் காணாதீர்கள், முடிந்தால் திருத்தங்கள் செய்யுங்கள்என்றார். குறைகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். 

                              இந்த நேர்மறைச் சிந்தனையானது நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும். மகாபாரதத்தில் அர்ஜுனரிடம் கிருக்ஷ்ணர், ‘உலகத்தில் நல்லவர்கள் அதிகமா அல்லது தீயவர்கள் அதிகமாஎன்று கேட்டார். அதற்கு அர்ஜுணர், ‘நல்லவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்றார். பிறகு, கௌரவர்களிடமும் கிருக்ஷ்ணர் இதே கேள்வியைக் கேட்கிறார். அதற்கு கௌரவர்கள், ‘இந்த உலகத்தில் கெட்டவர்களும், கொடியவர்களும் தான் அதிகமாக இருக்கிறார்கள்என்று உரைத்தனர். அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப அமைவது தான் நம் வாழ்க்கை. நீ எதை நினைக்கிறாயோ, அதுவாக ஆகிறாய்என்ற வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓர் உண்மை.

                   இருட்டைப் பார்த்து பழிக்காதீர்கள்; முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள்என்பார்கள். பழித்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் ஒரு நாள் பழிவாங்கப் படுவோம். மாறாக, ஏற்றி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். உங்களை ஏற்றி விட நிறைய பேர் இருப்பார்கள். புதிதாக வாங்கிய சட்டையில் ஒரு சிறியதாக ஓட்டை இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் பார்த்துப் பாராட்டுவது அந்த சட்டையில் அழகா அல்லது குறையாகத் தெரியும் அந்த ஓட்டையா? பதில் எதுவாக இருந்தாலும் அது தான் நீங்கள். சட்டென்று எறியும் அந்த வார்த்தையானது மற்றவர்களை மட்டும் பாதிக்க வில்லை,மாறாக உங்களையும் பாதிக்கிறது என்பதை மறந்துவிடலாகாது. வாழ்வது ஒரு முறை தான். அதை ஏன் குறையாகப் பார்க்க வேண்டும்?


                   அதை நிறையாகப் பாருங்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். இந்த தொழிற்நுட்பக் காலத்தில் திருத்தம் செய்யப்பட்டவைக்குத்தான் மவுசு அதிகம். காரணம், திருத்தம் செய்யப்பட்டவைக்கு இன்னொரு பெயர் புனையாக்கம்அல்லது ஆங்கிலத்தில் ‘innovation’ என்பார்கள். ஆக, இனியும் குறையைக் காணாதீர்கள். முடிந்தால் திருத்தங்கள் செய்து பாருங்கள்.

சிறுகதை..... ‘கோயில் கோபுரத்தில் வெள்ளைக்காரச் சிலை’.....

சிறுகதை.....


கோயில் கோபுரத்தில் வெள்ளைக்காரச் சிலை

                     எங்கே அவரு. வந்தோமா படித்துக் கொடுத்தோமா இல்லாமா, இவரு யாரு அந்தச் சிலையை உடைக்கச் சொல்வதற்கு? அவர வரச் சொல்லுங்கள் சார். இல்லையன்னா நிலைமை மோசமாகிடும் கூட்டத்தில் வந்த பெரியச்சாமியின் குரல் கடுமையாக இருந்தது. தடுமாறிப்போன தலைமையாசிரியர் திரு.முருகானந்தம் உடனே சுதாரித்துக் கொண்டார். வந்தவர்கள் காட்டமாக இருப்பது அவருக்குத் தெரியும். தானும் குரலை உயர்த்தினால் நிலைமை மோசமாகி விடும் என்று அவருக்குத் தெரியும். எனவே, அவர்களை அமைதிப்படுத்த  அனைவரையும் அழைத்துக் கொண்டு திடல் ஓரமாக சென்றார்.

                      ஐயா, அவர் செய்தது தவறுதான். என்ன நடந்தது என்று நான் விசாரிக்கின்றேன். அவர் ஒரு நல்ல ஆசிரியர். அவசரப் பட வேண்டாம். உங்களுடைய உணர்வை நான் மதிக்கின்றேன். அவர் இன்று பள்ளிக்கு வர வில்லை. அடுத்த வாரம் தான் பள்ளிக்கு வருவார். வந்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் தலைமையாசிரியர் திரு.முருகானந்தம் சொல்லி முடித்தவுடன் வந்தவர்கள் கொஞ்சம் மனம் மாறித்தான் போயிருக்கணும். இல்லை சார். கோயில்மேல் துரை அவரு மனைவியம்மா சிலை வச்சது இன்னிக்கு நேத்து இல்ல. இது காலா காலமும் உள்ளது. நாங்க அத மாத்த முடியாது சார். அப்புரம் அது சாமி குத்தமாகிடும்’. இதைக் கேட்ட தலைமையாசிரியர் முருகானந்தம் குழம்பித்தான் போயிருந்தார். காரணம் அப்படி ஒரு சிலையை அவர் பார்த்ததே கிடையாது. வந்தவர்கள் கொஞ்ச ஆறுதலுடன் விடைபெற்றுச் சென்றார்கள்.

                      அவர்கள் சென்றவுடன் உடனடியாக தலைமையாசிரியர் ஆசிரியர் தேசனுக்கு தொலைபேசி செய்தார். ஹலோ, வணக்கம் சார். எப்படி சார் இருக்கீங்க?’ ‘சார்.நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி சார் இருக்கீங்க?’ ஆசிரியர் தேசன் உற்சாகத்தோடு தன் தலைமையாசிரியரை நலம் விசாரித்தார். தலைமையாசிரியர் சற்று முன்பு பள்ளியில் நடந்த விஷியத்தை விலாவாரியாக ஆசிரியர் தேசனிடம் எடுத்துக் கூறினார். இதைக் கேட்ட ஆசிரியர் தேசன் சற்றே கலங்கினார். எப்படி இது நடந்தது என்று அவருக்குப் புரியவில்லை. இன்னும் இரு நாட்களில் ஆசிரியர் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆயத்தமாக இருந்த ஆசிரியர் தேசன் தன் எண்ணங்களைப் பின்னோக்கி சிந்திக்கலானார்.
இதோ, இரண்டரை ஆண்டு காலத்தை ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் முடித்து விட்டு இலட்சியக் கனவோடு முதல் நாள் பள்ளிக்கு தன் மோட்டார் வண்டியில் பறந்து கொண்டிருந்தார் இளம் ஆசிரியர் தேசன்.

                    அவரின் முதல் நாள் பயணமே அவரைச் சோதனையில் ஆழ்த்தி விட்டது. தோட்டப்புறத்தில் அமைந்திருக்கும் அந்தப் பள்ளி, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பயன்படுத்தப்பட்ட இரப்பர் தொழிற்சாலை தமிழ்ப்பாடசாலையாக மாறியிருந்தது. செம்மண் புழுதி இல்லாமல் அப்பள்ளிக்குச் செல்ல முடியாது. தேசன் ஆசிரியரும் அப்படித்தான். முதல் நாளே லேசான மழைத்தூரல். காட்டிற்குள் சென்று கொண்டிருந்த அவரின் மோட்டார் வண்டியில் எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று திடீரென்று  மோட்டாரின் சக்கரத்தில் புகுந்து விட்டது.

                         அதிர்ச்சியடைந்த ஆசிரியர் தேசன் கலக்கதுடன் மோட்டாரை செம்மண் சகதிக்குள் விட்டு விட்டார். மோட்டாரை விட்டு இறங்கும் பொழுது தவறுதலாக செம்மண் புழுதியில் வைத்து விட்டார். சப்பாத்து சேறு பட்டதையும் கவனியாமல் பாம்பு வந்த இடத்தைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார். அப்பாடா, நல்ல சகுனம் தான் என்றவாறு மீண்டும் தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார். வசதிகள் இல்லாதப் பள்ளிக்கூடம் தான். ஆனால், எல்லா அசதிகளையும் போக்கியது. அன்பான ஆசிரியர்கள், பணிவான மாணவர்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு நிம்மதி இருந்தது.  பள்ளிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் அவருக்கு ஆறாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடம் போதிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

                        மிகவும் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் தேசன் மாணவர்களிடையே நெருங்கிப்பழகி தமிழ்மொழி உணர்வை ஊட்டினார். ஒரு முறை மாலை வகுப்பின் போது ஆசிரியர் தேசன் கட்டுரை ஒன்றினை போதித்துக் கொண்டிருந்தார். அவர் வெறும் பாடத்தை மட்டும் போதிக்கும் ஆசிரியர் அல்ல, மாறாக மொழி உணர்வு, சமூதாயச் சிந்தனை, சமயம் ஆகியவற்றைச் சேர்த்து தன் மாணவர்களுக்கு போதிப்பவர். அன்றும் அப்படித்தான். மாணவர்களே! உங்கள் தோட்டத்து கோயில்களை நன்றாகப் பார்த்துள்ளீர்களா?’மாணவர்களும் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டினர். கோயிலின் கோபுரத்தில் சாமி சிலைகள் இருக்கலாம்.

                      ஆனால், வெள்ளைக்காரர் அவர் மனைவி சிலைகள் இருக்கலாமா?இது பாவம் இல்லையா?’ இது தான் அவருடையக் கேள்வி. மாணவர்கள் பலவாராக பதில் அளித்துக் கொண்டிருந்தனர். எல்லா கேள்விகளுக்கும் நிதானமாகவே பதிலளித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் தேசன். அதில் ஒரு மாணவன், ‘சார். இவ்வளவுப் பாவம் என்று தெரிந்தும் ஏன் இன்னும் இதை உடைக்காமல் இருக்கிறார்கள்?’அதற்கு ஆசிரியர் தேசன், ‘அப்படியெல்லாம் உடைக்க முடியாது. அதற்கு நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன. முறையாக அதைச் செய்ய வேண்டும் என்றார் அவர். இதைக் கேட்ட சில ஆண் மாணவர்கள் தங்களுக்குள்ளே முனகிக் கொண்டனர். 

                எப்பொழுதும் போல வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர் தேசன் தன் வீட்டிற்குப் பயணமானார். மறுநாள் காலையில் தன் பட்டமளிப்பு விழாவிற்குப் பயணமாகி கொண்டிருந்த பொழுது தான் தலைமையாசிரியரிடம் இருந்து அந்த தொலைப்பேசி அழைப்பு வந்தது. வகுப்பு முடிந்த அன்று நான்கு மாணவர்கள் நேராகத் திறந்திருந்த கோயிலுக்குச் சென்றுள்ளார்கள்.

                          ஆள் நடமாட்டம் இல்லாததால் நாள்வரும் பூட்டப்படாத கோயில் கதவைத் திறந்து உள்ளே புகுந்துள்ளனர். நாள்வரில் இருவர் கோபுரத்தில் ஏறி அந்த வெள்ளைக்காரர் மற்றும் அவரின் மனைவியன் சிலையைப் பிடித்து அசைத்து இழுத்துள்ளனர். ஆனால், சிலையை அவர்கள் உடைக்க வில்லை. அவர்கள் கைகளில் ஆயுதம் ஏதும் இல்லை. சிலை கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டது.

                         டேய் இராஜா! ரொம்ப கஷ்டமா இருக்குடா.அசைக்க முடியலடா.. என்று குமரேசன் அவேசப் பட்டான். டேய் எப்படியாவது உடைத்து விட்டு சீக்கிரம் ஓடி விடலாம் வா! என்று கூறிய இராஜா படபடப்புடன் காணப்பட்டான். நேரம் சரியில்லை என்பார்கள். அவர்கள் நேரமும் அப்படித்தான். அந்தத் தோட்டத்து ஜாகா கொஞ்சம் ஜாகாட்டாகவே செயல்பட்டு விட்டார். கோயிலின் மைல் அந்த மாணவர்களைப் பார்த்து விட்ட அவர் அவசரமாக மோட்டாரை விட்டு விட்டு நேராக  கோயிலுக்குள் ஓடினார். அவரைப் பார்த்த அந்த நான்கு மாணவர்களும் பதறி அடித்து ஓட முயற்சித்தனர். ஆனால், அந்த நான்கு மாணவர்களும் சரியாக மாட்டிக் கொண்டனர்.

                       அந்த ஜாகா அவர்களைப் பிடித்து கைகளைக் கட்டி கீழே உட்கார வைத்திருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த நான்கு மாணவர்களும் அவருக்கு வேண்டிய உறவுப் பையன்கள். பயந்து நடுங்கிப் போயிருந்த அந்த நான்கு மாணவர்களும் கடும் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டனர். அதற்குள் விஷயம் தோட்டத்திற்குள் பரவிவிட, சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் அங்கு வந்து விட்டனர். சீ! இவன் என்ன கொலையா செய்து விட்டான். கொலையாளியைப் போல் கட்டிப் போட்டு வைத்து விட்டார்களே?’ வந்திருந்த பெற்றோர் ஆவேசத்துடன் அந்த ஜாகாவிடம் கத்தினார். இவர்கள் செய்தது பெரிய குற்றம். சாமி சிலையை எப்படி இவர்கள் உடைக்க முடியும்? போலீஸ் வரட்டும்..மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம். ஜாகாவும் குரலை உயர்த்தித் தான் பேசினார்.

                          சரி ஐயா! நீங்கள் சொன்னதுப் போல் சிலை ஏதும் இங்கு உடைபட வில்லை. போலீஸ் எல்லாம் இங்கு வர வேண்டாம். இது சின்னப் பிரச்சனை தான். இவர்களை விசாரித்து விட்டுவிடலாம். இவர்கள் நம்ப பிள்ளைகள் தானே?’ கூட்டத்தில் வந்திருந்த தோட்டத்து கிராணி அவர்கள் எல்லாரையும் சமாதானப்படுத்தினார். சரி...அந்த பிள்ளைகளை இங்கே கூப்பிடுங்கள்.என்ன நடந்தது என்று விசாரிப்போம்.தம்பி உங்க பேரு என்னது. கிராணி அய்யா அந்த மாணவனைப் பார்த்துக் கேட்டார். என் பெயர் இராஜா சார்.’ ‘அப்படியா...சரி ஏன்யா கோபுரத்தில ஏறி அந்த சிலையை உடைக்கப் பார்த்தீர்கள்? பயப்படாதீங்க.. நான் இருக்கேன்..சொல்லுங்க என்று கிராணி ஐயா பவ்வியமாகக் கேட்டார். அமைதியாகப் பார்த்த இராஜா நடந்த வற்றைக் கூறலானான். எல்லாருடையக் கண்களும் இராஜாவின் மேல் தான் இருந்தது. ஆனால் இராஜாவுக்கு மட்டும் அந்த ஜாகாவைப் பார்க்க  இன்னும் பயமாகத் தான் இருந்தது.

                   தேசன் சாரு எங்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்குறாரு. இன்னிக்கி மாலை வகுப்பு அவரு தான் எடுத்தாரு. நம்ப கோயில் கோபுரத்தில வெள்ளைக்காரச் சிலை இருப்பதைப் பற்றி நிறையப் பேசினாரு. அது பவம்னு சொன்னாரு. தவறுன்னு சொன்னாறு. அவரு எங்களை உடைக்கச் சொல்லல. நாங்க தான் யோசிச்சி முடிவு செஞ்சோம்.’ என்று சொன்ன முடித்தவுடன் கூட்டத்தில் ஆசிரியர் தேசனின் பெயர் அடிபடலாயிற்று. நிலமை சரியானவுடன் எல்லா பெற்றோர்களும் அவர் தம் பிள்ளைகளைக் கூட்டிச் சென்று விட்டனர். திடீரென்று பெரு மூச்சு விட்ட ஆசிரியர் தேசன் தன் எண்ண அலைகளிலிருந்து விடுபட்டார். இப்படி நடந்து விட்டாதே என்று வருத்தப்பட்டார். அந்த வருத்தத்துடன் தன் பட்டமளிப்பு விழாவிற்காக ஈப்போ நோக்கிப் பயணமானார்.

                   மறுவாரம் பள்ளிக்குத் திரும்பிய ஆசிரியர் தேசனை தலைமையாசிரியர் அனுமதியுடன் சில கேள்விகளைக் கேட்டனர். நீங்க செஞ்சது ரொம்பத் தவறு சார். ஒன்னுந்தெரியாதப் பிள்ளைகளை நீங்கள் தூண்டி விட்டது தவறு. வந்தோமா படித்துக் கொடுத்தோமா என்று இருக்கணும். தலைமையாசிரியரிடம் நாங்க எல்லாம் பேசிட்டோம். இனிமே இப்படி வராதபடி பார்த்துகுங்க சார். மிகவும் பொருமையாகவே தலைவர் பெரியச்சாமி இவ்வாறு கூறினார். ஆசிரியர் தேசனும், ‘நடந்தத் தவறுக்கு என்னை மன்னிசிருங்க. இது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது. என்று கூறி முடித்தார்.

சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு……

                    அதே தோட்டத்துக் கோவிலின் கும்பாபிஷேகம். கோவில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் தேசனுக்கும் ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. அதைப் பார்த்தவுடன் கட்டாயம் செல்ல வேண்டும் என்றிருந்தார். அந்த நாளும் வந்தது. தன் குடும்பத்துடன் கோவிலின் வாயிலுக்குள் நுழைகிறார் ஆசிரியர் தேசன். அவரின் கண்கள் கோவிலின் கோபுரத்தை உற்றுப் பார்க்கின்றன. என்ன ஆச்சர்யம். அங்கு அந்த வெள்ளைக்காரச் சலையைக் காணவில்லை. அவரின் கண்கள் குளமாயின. கண்ணிற்குத் தெரியாத தெய்வத்தைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு, கண்ணிற்குத் தெரிந்த தெய்வமாகிய அந்த நான்கு மாணவர்களைத் தேடி ஓடுகின்றார் ஆசிரியர் தேசன். அவர்களின் சந்திப்பு நிச்சயமாக அந்த கோபுரத்தின் கீழ் தான் நடந்திருக்கும்.