எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சரஸ்வதி என்றால் மூளை...


                   வானத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்று கேட்டால் பதில் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியும். மொத்தம் 100 கோடி நட்சத்திரங்கள் என்று ஒரு கணக்கு உள்ளது. அதே 100 கோடி நியுரோன் அல்லது உயிர் அணுக்கள் தாம் நம் மூளையிலும் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். நம்முடைய தலையில் தான் மூளை என்ற அபாரமான, இன்னும் மனிதனால் அறியப்படாத இரகசியம் அமைந்திருக்கின்றது. உடம்பில் எங்கு அடிப்பாட்டாலும் பரவாயில்லை, மூளையில் தலையில் மட்டும் அடிப்படக்கூடாது என்பார்கள்.

                   அபாரமான ஆற்றல் கொண்ட மூளையின் சக்தியை இது வரை துள்ளியமாகப் பயன்படுத்தியவர் அறிவியல் மேதை ஆல்பட் ஐன்ஸ்டைன். அவரும் மூளையின் மொத்த ஆற்றலில் 7% சதவிகிதத்தையே பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. நடுத்தரமான மக்கள் 3 – 4 சதவகிதம் வரையே மூளையின் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிஞர்களும் மனோதத்துவ ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். சராசரி மனிதர்களின் மூளையின் எடை 1.3 -1.4 கிலோகிராம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் டீப்பக் சோப்ரா தன்னுடைய சூப்பர் பிரேய்ன் என்ற நூலில் நிமிடத்திற்கு 250 000 இலட்சம் புதிய உயிரணுக்கள் உருவாகி ஒன்றோடொன்று தொடர்புக் கொள்கிறது என்கிறார். இன்னும் ஆச்சர்யமான விடயங்களை இங்கே எடுத்துக் கூற முடியும்.

                     ஆனால், இதில் என்ன அதிசம் என்னவெனில் அபாரமான அந்த மூளைக்கு ஓர் உருவம் கொடுத்து பூஜித்து நம்மையெல்லாம் வணங்க வைத்தார்களே,அதனை என்ன சொல்வது? ஆம், சரஸ்வதி தேவி என்றால் பக்தி இலக்கியத்தில் மூளை என்று பொருளுண்டு. அப்படியாயின் இது காரும் நாம் வணங்கியது சரஸ்வதி தேவி என்ற பெண்ணை அல்ல, ஈடு இணையற்ற மூளையைத் தான். இந்த இரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  முன்பெல்லாம் ஒரு பெற்றோர் தன் பிள்ளையைப் பள்ளியில் விட்டுவிட்டு அந்த ஆசிரியரிடம், ‘எங்கு வேண்டுமானாலும் உரித்தெடுங்கள்,ஆனால் தலையில் மட்டும் காயம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்பர்கள். அதன் உண்மையானப் பொருளை உணர்ந்து தான் கூறினார்களா என்பது தெரியாது.

                   தமிழ்ப்பள்ளிகளின் அடையாளமாக இருந்து வருவது சரஸ்வதி பூஜையும் ஒன்று. தமிழ்ப்பள்ளிகள் இன்னும் 1000 ஆண்டுகள் நிலைக்க வேண்டும் என்கிற வேட்கை சரஸ்வதி பூஜையின் அன்று உணர முடியும். ஆசிரியர்கள் பாரம்பரிய உடையில் காணும் காட்சியும், மாணவர்கள் அனைவரும் ஜிப்பா,பாவாடை தாவனியில் வரும் காட்சியும் காணக் கிடைக்காதது. அன்று முழுவதும் மாணவர்களின் மகிழ்ச்சி பள்ளியையே அலங்கரித்து இருக்கும். பூஜைக்குக்  கொடுக்கின்ற அந்தச் சிரத்தையானது, சரஸ்வதியின் உண்மையான பொருளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே என் அவா.

                   அறிவியலில் மூளையை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அஃதை உணர்த்துவதற்காகத் தான் சரஸ்வதி தேவி 4 கைகளோடு காட்சித் தருகிறாள். சேலையின் நிறம் வெண்மையாக இருக்கும். அதன் அர்த்தம் நம் மூளையானது வெண்மை நிறமுடையது. அடுத்து, வெண்தாமரையின் வடிவமும் மூளையின் வடிவமும் ஒன்றாகிறதைக் குறிக்கிறது. வெண்தாமரை நிச்சயம் தண்ணீரில் மிதக்கும் படியாகத் தான் இருக்கும். அது நம் மூளையானது தண்ணீரில் மிதக்குவதைக் குறிக்கின்றது. இது போதாதென்று மாணவர்களுக்குக் கற்றல் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறது. மூளைக்கு மிகவும் பிடித்தது இசை. இசைத்துறையிலும் சரி, கலைத்துறையிலும் சரி இதில் ஈடுபடும் எந்த மாணவரும் நிச்சயம் கெட்டிக்காரர்களாகத் தான் இருப்பார்கள். இசை மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது என்பதனை மேலை நாட்டு அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

                   சரஸ்வதியின் இன்னொரு வலதுக்கையில் உத்ராட்சை மாலை இருக்கும். இது ஜெபம் செய்வதற்கு மட்டுமல்ல, படித்ததைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது மனதில் பதிவாகிறது என்பதைக் குறிக்கின்றது. இடது கையில் ஓலைச்சுவடியைப் பார்க்கலாம். படித்ததை மீண்டும் மீண்டும் எழுதும் பொழுது மனதிலும் மூளையிலும் உடனடியாகப் பதிவாகிறது. மேலும், இடது கையில் எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் நேரிடையாக வலது பக்க மூளையில் ஆற்றலைப் பெறுகிறார்கள். இம்மூன்று கற்றல் நுணுக்கங்களும் ஞாபகச் சக்திக்கு அபாரமானவை. இதுகாரும் விளக்கப்பட்ட விடயங்கள் எந்தளவிற்கு மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


                   சிவபுராணத்தில் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று மாணிக்கவாசகனார் உரைத்திருப்பார். அதேப்போல், பொருள் உணர்ந்து சரஸ்வதியைப் பாருங்கள். புதியப் பதிவுகளை உணர்வீர்கள். எடுத்தவுடன் மாணவர்களைத் தலையில் அடிப்பது, குட்டுவது மறைந்தேப் போகும். சரஸ்வதிப் பூஜை நம் அடையாளமாயின் அதை அர்த்தமுள்ளதாக்குவோம். அடுத்தத் தலை முறைக்கு எடுத்துரைக்க ஆசிரியர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். பூஜையின் இறுதியில் பிரசாதம் பரிமாறப்படுவது போல், பூஜையின் ஆரம்பத்திலேயே சரஸ்வதியின் விளக்கத்தினைப் பரிமாறிவிடுங்கள். இரண்டும் இனிதாகட்டும்.